அண்மையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாட்டில் தில்லி இலக்கிய பேராசிரியர் அபூர்வானந்த் ஆற்றிய உரை இங்கு தரப்படுகிறது
நாம் அனைவரும் உழைக்கும் மக்களின் ஒரு பகுதி. நாம் யாராக இருந்தாலும் எந்த நிலையில் இருப்பினும், நாம் ஒவ்வொருவரும் உழைப்பின் ஒரு அங்கமாகவே திகழ்கிறோம். நாட்டில் நடைபெறும் மிக முக்கியமான, மக்கள் போராட்டங்களில் நம்மைப் போன்ற உழைக்கும் மக்களின் அமைப்புகள் பங்கெடுக்க வேண்டிய அவசியம் என்ன? நாம் நம்முடைய பொருளாதார நலன்கள் குறித்து மட்டும் பேசினால் போதுமா? உரையாடல்கள், விவாதங்கள் போன்றவை யாவும் சமூகத்தில் அவ்வளவு எளிமையாக, சிரமமின்றி நடைபெறும் நிகழ்வுகளல்ல. அதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும். யார் என்ன விஷயம் குறித்து பேசுகிறார் என்பது எவ்வளவு முக்கியமான அம்சமோ, அது போன்றது யாரிடம் நாம் பேசுகிறோம் என்பதும்தான். ஆகவேதான் நமது சமூகம் திறந்த மனதோடு கேட்கும் சமூகமாக இருப்பது மிக முக்கியம். மாற்றுக் கருத்துக்களை கேட்பதற்கான நிதானமும், திறந்த மனதோடும் கேட்க வேண்டிய பக்குவமும், பயிற்சியும் தேவைப்படுகிறது. நாம் இத்தகைய இந்திய சமூக கருத்தியலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம், அதை இன்னும் நாம் முழுமையாக எட்டவில்லை என்ற புரிதலோடு, அதை நோக்கி நகர்கிறோம்.
தேசத்தின் உரையாடல்
சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் இம்மூன்றும் இந்தியாவில் என்ன விளைவுகளை, அரசியலமைப்பின் மீது பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோபால் கவுடா எடுத்துரைத்திருக்கிறார். அரசியல் ரீதியாக இது என்ன நோக்கங்களை கொண்டுள்ளது, என்ன விளைவுகளை ஏற்படுத்த எத்தனித்துள்ளது என்பதை நாம் இன்று பேசலாம். நாம் வெவ்வேறு மதங்களை பின்பற்றக்கூடியவர்கள். ஆனால் நம் அனைவரையும் சுதந்திரம், சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம் போன்ற கருத்தாக்கங்கள் ஒன்றிணைக்கின்றன. இக்கருத்தாக்கங்களின் மீது நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். வரலாற்றில் ஜனவரி 27ல் நாஜி படைகள் உருவாக்கிய மிகப்பெரிய அளவிலான “ஆஷ்விச்” யூத அழிப்பு முகாம்களில் (Austzwitz) லட்சக்கணக்கான யூதர்கள் 75 ஆண்டுகளுக்கு முன் நாஜிக்களால் கொன்று குவிக்கப்பட்டனர். இம்முகாம்கள் குறித்து நாம் பேசும்போது யூதர்களின் வலிகளை உணரும் ஒருவராக, அதன் ஒரு பகுதியாக நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்கிறோம். இச்சட்டத்தின் வாயிலாக மக்களிடத்தில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தி, சமூகத்தில் மதங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனி கூடாரங்களாக மாற்ற ஆளும் மத்திய அரசு முயற்சிக்கிறது.
நுண் அரசியல் என்ன?
குடியுரிமை சட்டத்தின் மூலம் இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என மிகத் தெளிவாக ஆளும் அரசு கூறுகிறது. பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து 2014 க்கு முன்பாக எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் குடியேறியவர்களை மட்டுமே குறிவைக்கும் நோக்கம், இசுலாமிய சிறுபான்மையினர் மட்டும் அகதி முகாம்களுக்கு அனுப்பப்படுவர், மற்ற சமூகத்தினர் கவலை கொள்ளத் தேவையில்லை என்கிறது. இப்படிப்பட்ட சட்டத்தின் பின்னணியில் இந்தியாவிலுள்ள அனைவருக்கும் சம உரிமை உண்டு என்று நாம் எந்த அடிப்படையில் கூறமுடியும்? இச்சட்டத்திற்கு பின்னாலுள்ள மறைமுகத் தாக்குதல் மிகத்தெளிவாக தெரிகிறது. நாடற்றவர்களாக உள்ள சிறுபான்மையினர் மீது அரசு உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளதா? இலங்கையிலிருந்து பெளத்த பேரினவாதத்தால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட பின்னணியில் துரத்தப்பட்டவர்கள் இன்றும் இந்தியாவில் அகதிகளாக உள்ளனரே. அதே போல் பூடானிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு அங்கு வழிபாடு மறுக்கப்பட்டு துரத்தப்பட்டவர்கள், மியான்மரிலிருந்து விரட்டியபடிக்கப்பட்ட ரோஹிங்கியாக்கள் ஆகியோருக்கு என்ன நீதி! ரோஹிங்கியாக்களின் இனப்படுகொலை குறித்து சர்வதேச ஐ.நா. நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே இம்முன்று நாடுகளை மட்டும் மத்திய அரசு தேர்வு செய்திருப்பதன் அரசியல் நோக்கம் இம் மூன்றும் இசுலாமிய பெரும்பான்மை நாடுகளாக இருப்பதுதான். எங்கெல்லாம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனரோ, அங்கெல்லாம் மற்ற சிறுபான்மையினரை அவர்கள் துன்புறுத்துகின்றனர் என்ற கருத்தியல் இந்துக்களுக்கு பொதுவாக இருப்பதை நாம் பார்க்கிறோம். இக்கருத்தியல் நம் மனங்களில் எவ்வித ஆதாரமின்றியும் நிலவுகிறது. ஆளும் அரசு இக்கருத்தியலை பயன்படுத்தி, இதை மேலும் வலுவடைய செய்து, பொதுவெளியை இசுலாமிய சிறுபான்மையினருக்கு எதிராக நகர்த்தும் நுண் அரசியலை முன்னெடுக்கிறது.
வரலாற்று தவறா? பெருமையா?
1947ல் வரலாற்றில் நடந்த மிகத்தவறான செயல் “இரண்டு தேசம்” கொள்கை கடைப்பிடிக்கப்படாததுதான் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். அந்த வரலாற்று தவறை சரி செய்வதாக பேசுகிறார்கள். இஸ்லாமிய மதத்தை அடிப்படையாகக் கொண்டு பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட்டது. அதுபோல் இந்தியாவும் உருவாக வேண்டும் என்று நினைத்தவர்கள் இவர்கள். ஆனால் எவ்வித மதமும் அடிப்படையாகக் கொண்டு உருவானதல்ல இந்திய தேசம். மதம் ஒரு அடிப்படை அம்சமாக இந்நாடு உருவாவதற்கு இருந்துவிடக்கூடாது, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே திகழும் என்று முடிவு செய்யப்பட்டது. இரண்டு நாடுகளின் உருவாக்கமும் இரு வேறு அடிப்படை கொள்கைகளை கொண்டு நிகழ்ந்தவை. இந்தியா உருவானபோதே எல்லா மதத்தவருக்குமான நாடாக அடிப்படையில் உருவானது. அச்சமயத்தில் 80% க்கும் அதிகமானவர்கள் இந்துக்களாகவும், 15% க்கும் அதிகமானவர்கள் இஸ்லாமியர்களாகவும் மற்றவர்கள் 5%க்கும் குறைவாகவுமே இருந்தனர். எண்ணிக்கை குறைவாக உள்ளவர்கள் பெற்ற உரிமை, பெரும்பான்மையாக இருப்பவர்களுக்கு அளிக்கப்பட்ட அதே உரிமைதான். 1947ல் உலகிலுள்ள மற்ற ஜனநாயகச் சூழலை விடவும் மிகவும் உயர்ந்த ஒன்றாக இந்தியச் சூழல் திகழ்ந்தது. உலகிலுள்ள அனைத்து நாடுகளும் நமது நாட்டின் அடிப்படை ஜனநாயகத்தை கண்டு வியந்தனர். இந்தியா எப்படி இதை அடையும் என்ற பிரமிப்புடன் எதிர்நோக்கினர். ஏனெனில் இரண்டு நாடுகளின் பிரிவினையின் போது லட்சக்கணக்கான இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்ட பின்னணியில் மதச்சார்பற்ற நாடாக இந்தியா எவ்வாறு வெற்றியடைய முடியும் என்று வியந்தனர்.
இந்திய நாட்டின் உருவாக்கம், ஜனநாயகத்தை முழுமையாக அடைய, சமூகநீதியை நிலைநிறுத்த, மதச்சார்பற்ற சகோதரத்துவத்தை எட்டுகிற போராட்டத்தில் நடைபோடத் துவங்கியது. இவற்றை வலியுறுத்தியே இந்திய அரசியலமைப்பின் முகவுரையில், “இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த, சமநெறி சார்ந்த, மதச்சார்பற்ற குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும், சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையும், சமய நம்பிக்கை மற்றும் வழிபாட்டு சுதந்திரமும், தகுதிநிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவம் உறுதியாக கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் உறுதியளிக்கும் சகோதரத்துவத்தை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவுமான விழுமிய முறை காண உறுதியேற்போம்” என்று உள்ளது. ஆகவே இதில் குறிப்பிட்டதைப்போல இந்தியாவில் இன்று வரை மதச்சார்பின்மை, அனைவருக்குமான சுதந்திரம், சகோதரத்துவம், சமூகநீதி முழுமையாக உருவாகி முடியவில்லை என்றே பொருள். வெவ்வேறு சமூகங்களிடையே ஒரு அன்பு சூழ்ந்த சூழல் இன்னும் முழுமையாகக் கனிந்திடவில்லை. இன்று வரை ஏற்றத்தாழ்வுகள் பல வழிகளிலும் நிலவுகின்றன. என்றாலும் இந்திய அரசியலமைப்பின் விழுமியங்களை வென்றடைவதற்கான பாதையில் இந்தியா இன்று வரை நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பது உண்மை.
இவ்விழுமியங்களை வென்றடைவதில் மட்டுமே இந்தியா என்ற முழுமையான நாடு உருவாகும் என்கிறது நமது சாசனம். ஆகவேதான் உலக நாடுகள் இந்திய உருவாக்கத்தை மிகவும் ஆச்சரியத்துடன் எதிர்நோக்கினர். இந்தியா உருவான காலத்தில் மிகப்பெரிய பத்திரிகையாளர்களும், ஐரோப்பிய அரசியலாளர்களும் தங்களது குறிப்புகளில், இந்தியா பல்வேறு சமூகங்களைக் கொண்ட ஒரு நாடு, ஆகவே அதன் இலட்சியங்களில் வெற்றியடைய வாய்ப்பில்லை, ஏனெனில் அங்கே சமூகங்களுக்கிடையில் நல்லதொரு நட்பு கிடையாது, அதன் நோக்கம் தோல்வியடையும் என்று குறிப்பிட்டனர். இதுவே 1946, 1947, மற்றும் 1948ல் இந்தியா பற்றிய பார்வையாக திகழ்ந்தது. ஆனால் நாம் 70 ஆண்டுகளுக்கு மேலாக ஒற்றுமையுடன் வாழ்கிறோம். இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும், நமது நீண்ட கருத்தியல் போராட்டத்தால் மட்டுமே அரசியல் சாசன மாண்புகளை வென்றெடுக்க முடியும். ஆகவே இப்போராட்டத்தை நாம் கண்டிப்பாக நடத்தியே தீர வேண்டும்.
ஏன் தொழிற்சங்கத்திற்கு குறி?
இத்தகு நோக்கங்களுக்காகவே தொழிற்சங்கங்களும், ஜனநாயக அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாகவே உங்களை இன்றாளும் ஆட்சியாளர்கள் வெறுக்கின்றனர். நீங்கள் இன்சூரன்ஸ் அரங்க தொழிற்சங்கமாக செயல்பட்டாலும் உங்களது கொள்கைகள் இந்திய அரசியல் சாசன மாண்புகள் வெற்றிபெறுவதற்கான கருத்தியலை உட்கொண்டுள்ளது. நாம் பல்வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு குடையின் கீழ் ஜனநாயக நெறி வழி அணி திரண்டுள்ளோம், இதன் காரணமாகவே நாம் வெறுக்கப்படுகிறோம். இதன் விளைவுதான் நம் போன்ற ஜனநாயக அமைப்புகளை / சங்கங்களை அழிப்பதற்கான முயற்சியை செய்கின்றனர். மனித சமூகத்திற்கான புதிய மாண்புகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள், ஒவ்வொரு பிரிவினரையும் தனிமைப்படுத்துகிற சூழலை ஏற்படுத்த துடிக்கிறார்கள்.
கற்பனையை விஞ்சிய நிஜம்
இன்றைய ஆட்சியாளர்கள் மற்றவர்களின் வலிகளை புரிந்துகொள்வதற்கான ஒரு சூழலை உருவாக்கவில்லை, இந்திய அரசியல் சாசன விழுமியங்கள் கண்டிப்பாக நிறைவேறாது என்று போராடுபவர்களை நோக்கி கொக்கரிக்கின்றனர். இதற்கு நாம் எதிர்வினையாற்ற வேண்டும். வரலாற்றில் ஜெர்மனியில் யூதர்களுக்கு என்ன நிலையை இட்லர் உருவாக்கினான் என்பதை நாம் அறிவோம். ஐரோப்பா முழுவதும் யூத இன அழிப்பை ஏற்படுத்தினான், அதற்கான வதை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. வதை முகாம்களுக்கு யூதர்கள் அழைத்துச் செல்லப்பட்ட போது வழி நெடுகிலும் மக்கள் அக் கொடுமைக்கு ஆதரவு அளித்தனர். இட்லர் மக்களின் பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்டான். 1924-ல் இட்லர் சிறையிலிருந்தபோது தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்த நிகழ்வு ஒன்று உண்டு. ஆஸ்திரியாவில் “யூதர் இல்லா நகரம்” (The city without Jews) என்ற மௌன மொழி திரைப்படம் வந்தது. யூதர்களை இனஅழிப்பு செய்வதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே, யூதர்களை மக்கள் கொடுமைப்படுத்துவது போன்றும், அவர்களை மனிதத் தன்மையிலிருந்து கீழாக நடத்தி உற்சாகமாக சிரித்து மகிழ்வதுமான காட்சிகள் அதில் இருந்தன.
படத்தில் காட்சிப்படுத்தப்பட்டதற்கு 20 ஆண்டுகள் கழித்து அவையாவும் உண்மையாக நிகழும் சம்பவங்களாக மாறின. யூதர்கள் பொதுவெளிகளில் துன்புறுத்தப்பட்டனர். நகரங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்டனர். இன அழிப்பு முகாம்களுக்கு யூதர்கள் கொண்டு செல்லும் வழி நெடுகிலும்,யூதர்கள் தாங்கள் வாழ்ந்த நகரத்திலேயே, தங்களுடன் நட்புடன் பாராட்டி பழகிய நண்பர்களே தம்மை இழிவுபடுத்தி கை தட்டி, சிரித்து ரசித்ததை எவ்வாறு உணர்ந்திருப்பர் என்பதைக் காட்சிப்படுத்தியதை விட மிகக்கொடுமையான நிகழ்வுகள் ஐரோப்பா முழுவதும் அரங்கேறின. இவையனைத்தும் ஒரு சிவில் சமூகத்தில் அரங்கேறியது என்பதை நினைவில் கொள்வோம். ஜெர்மன் தத்துவங்களின் நாடு, காரல் மார்க்ஸ் போன்ற மேதைகள் இருந்த நாடு, பிரான்ஸ் கலை மற்றும் கலாச்சாரத்திற்கான நாடு. ஆனால் அங்கேயெல்லாம் கூட வெறுப்பை உமிழும் சிந்தனைகள் வளர்ந்தன. தாக்குதல்கள் தொடுத்தன. போலந்து, ஆஸ்திரியா நாடுகளிலும் நிகழ்ந்தன. இந்தியாவில் “வேலி முகாம்கள்” அசாமில் உருவாக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் அத்தகைய முகாம்களை உருவாக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அங்கு குடி மக்கள் பதிவேட்டில் 19 லட்சம் பேர் விடுபட்டுள்ளனர். அவர்களில் 14 லட்சம் பேர் இந்துக்கள். 5 லட்சம் பேர் இஸ்லாமியர்கள். இந்த இஸ்லாமியர்க்கு எதிராக மனோரீதியான யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளது. சி.ஏ.ஏ வின் நோக்கம் அதுதான். நீ “எங்களை” சார்ந்தவராக இல்லாவிட்டால் நீ இரண்டாம் தர மனிதன் ஆகி விடுவாய் என்கிறார்கள். இஸ்லாமியர்கள் அவமானப்படுத்தப்படுவதாக உணர்கிறார்கள்.
காந்தியின் கனவு
தேசப்பிதா மகாத்மா காந்தி 1917 ல் சம்பரான் அவுரிச் சாய விவசாயிகளுக்கு “சுயம் இழக்காத சமாதானம்” வேண்டும் என்றார். இன்று அதையே எல்லா குடி மக்களுக்கும் எதிர்பார்க்கிறோம். யாரும் வன்முறையை விரும்பவில்லை. இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள். அதற்கு என்ன பொருள்? உங்கள் குரலை யாரோ கேட்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள். இதுவே சுயம் இழக்காத சமாதானம். அத்தகைய குடி உரிமையே பரஸ்பர நெருக்கம். ஒருவரை ஒருவர் மதிப்பது. அரசியலாக, உரிமைகளை கொண்டிருப்பதற்கான உரிமை. குடிமை உரிமையை தனிமையில் உணர முடியாது. சக வாழ்வு வேண்டும். சமூக பிணைப்பு உணரப்பட வேண்டும். சக வாழ்வின் மேன்மையை ஒதுக்கலில் எப்படி பெற முடியும்? நாகரிக அணுகல் அங்கே இருக்க வேண்டும். நாம் அனைவரும் சமூகத்தின் கண்ணாடிகள். இதை நாம் அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் நாம் இக்கொடூரங்களை அனுமதித்தால் நமது அரசியல் சாசன விழுமியங்களுக்கு துரோகமிழைப்பவர்களாக, நமது சொந்த சகோதரர்களுக்கு தீங்கிழைப்பவர்களாக வரலாற்றில் அடையாளப்படுத்தப்படுவோம்.
சிறையடையாது எங்கள் ஆன்மா
சம உரிமைக்காக மக்கள் எந்தளவிற்கான முக்கியத்துவத்துடன் போராடுகிறார்கள் பாருங்கள். ஜனநாயக குரல்களை உடைக்கும் முயற்சிக்கு எதிராக மக்கள் எவ்வாறு அணிதிரண்டு சாகேன் பாக், பாட்னா , அலகாபாத் என்று பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான இடங்களில் போராடுகிறார்கள் என்று உற்று நோக்குங்கள். ஜனநாயக மாண்புகளின் வாயிலாக எந்தளவிற்கு உத்வேகத்துடன் பொது சமூகவெளிகளில் சமூக கருத்தியல் குரல்களை ஒலிக்கிறார்கள் பாருங்கள். இப்போராட்ட குரல்களில் பெரும்பாலானவை பெண்கள், குழந்தைகள், முதியவர்களுடையது. பெண்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நாள் முழுவதும் தெருக்களில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். இது இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஜனநாயகப் போருக்கு பெண்கள் தலைமையேற்று நடத்தும் அனுபவம். அரசின் அராஜகத்திற்கெதிரான கர்ஜிக்கும் குரல்களாக பெண்களின் குரல்கள், “நாங்கள் வெறும் உடல்களல்ல, அரசு வேண்டுமானால் தனது போலீஸ் மற்றும் அதன் ஏவல்களைக் கொண்டு எங்களை கைது செய்யலாம். ஆனால் எங்களது ஆன்மாக்களின் கருத்தை சிறையிலடைக்க முடியாது” என்று ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு அடங்கமறுத்து , எதிர்த்து சாகேன் பாக் தொடங்கி பல இடங்களிலும் கேட்கின்றன. அச்சமின்றி மக்கள் எழுந்து நிற்க வேண்டிய நேரம். எதிர்த்து நிற்க வேண்டிய தருணம். நமது குரல் அவர்களுக்கு ஆதரவாக ஒருமைப்பாட்டின் வெளிப்பாடாய் அமைய வேண்டும். தேசத்தின் பயணம் இந்த திசை வழியில் மகிழ்ச்சியோடு அமைய வேண்டும்.
தமிழில்: தஞ்சாவூர் விஜயகுமார்